தொடரும் ‘தேசிய மொழி’ விவாதம்

இந்தி திணிப்பு, தேசிய மொழி, ஒற்றை மொழி கொள்கை  எனப் பல மாநிலங்களில் மொழி சார்ந்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மொழி ரீதியான ஒடுக்கு முறைகள் திணிக்கப்படும் போது, இவ்விவாதங்களின் வீரியம் வழுக்கும். ஆனால் முற்றாய்  தீர்வு வந்த பாடில்லை. இந்தப் பதிவு ‘தமிழ் மட்டுமே செம்மொழி’, ‘எம்மொழி போன்று வேறில்லை’; என்று மார்தட்டி மற்ற மொழி தூற்றும் முயற்சி அல்ல. அன்றி, தாய்மொழி என்பதின்  முக்கியத்துவம் மற்றும் கூட்டாச்சியில் மொழிகளின் நிலை  போன்றவற்றைக் குறித்தே. தமிழ் ஒரு உதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

hindiதமிழ்நாட்டைப்  பொறுத்த வரை தமிழ் அல்லாத எந்த மொழியும் தேசிய மொழி என்ற அடையாளத்தைப் பெற வாய்ப்பில்லை. எனினும் தாய் மொழியே முதலானது என்ற தமிழர்களின் கருத்து தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டும், கேளிக்குள்ளாக்கப் பட்டும் விவாதங்கள் குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது.

தமிழர்களும், இந்தி எதிர்ப்பை தீர்க்கமாக முன் வைக்கும் பிற மாநிலத்தவரும் ஏன் ‘தேசிய மொழி தேவை’  என்ற சித்தாந்தத்தை ஏற்க மறுக்கின்றன?

இந்தியா தேசங்களின் தேசம். இதை ஒற்றை தேசமாகச் சித்தரிக்கும் முனைப்பு தேசிய கட்சிகளிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. நோக்கம் பலவாறாக இருந்து வந்திருக்கிறது. பொதுக்கருத்து எனப் பார்த்தால் ‘நாம் ஒற்றை தேசமாகி விட்டோம், இனி மாநிலங்களுக்கிடையே ஆனா தொடர்புகள் ஒரு ஒற்றை மொழியிலேயே இருத்தல் அவசியம். இந்தி பெரும்பாலான மாநிலத்தவர் பேசுகிறார்கள் அதனால் அதையே ஒற்றை மொழியாக வைத்துக்கொண்டால் செயல் திட்டம் எளிதாகி விடும்’, என்பதே.

ஆனால் அடிப்படைச் சிக்கல் 6-8 மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசிகிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பெருகி இருக்கலாம். ஆனால் மற்ற மொழிகளின் செழுமையும், வகைமையும், அம்மொழிகளைப் பேசுகிறவர் எண்ணிக்கையும் அதிகமாவே இருக்கின்றன. ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு, மொழி எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, பின்னர் 15 ஆண்டு கழித்து இந்தி ஆட்சி மொழி ஆகலாம் என்ற கொள்கையை காங்கிரஸ் அரசு கைவிட்டு, வெறும் சில மாநிலங்களால்  மட்டுமே  இப்போராட்டத்தில் கைகொடுகப்ப் பட்டு தமிழ்நாடு ஒரு வெற்றிக் களைப்பில் தனிமைப் படுத்தப் பட்டது. தூசி வாரி சபித்தவர் பலர். இத்தனை கோபங்களுக்கு இடையிலும் நாம் செய்த போராட்டம் வெறும் மொழிக்காக மட்டும் இல்லை; நம் வேர்களுக்கே.

சரி, பொதுத் சிந்தனை என்பது திணிக்கப் பட்டதே. அரசியல் லாபங்களுக்குகாக புத்திசாலிகளால் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிய வைக்கப்படும் எளிமையான கருத்துக்களே. இவற்றை ஏன் இவ்வாறு கொண்டு சென்று மக்களிடம் சேர்க்க வேண்டும்? லீக் வான் யூ  ஒரு முறை இந்தியா வந்திருந்த போது  அவரிடம் ஒரு IAS அதிகாரி கேட்ட கேள்வி – “இன்று உங்களிடம் இந்தியாவைக் கொடுத்தால் சிங்கப்பூர் போன்று அதை உங்களால் மாற்ற முடியுமா?’. லீக் வான் யூ ஒரு நேர்மையான புத்திசாலி. அவருடை பதில் மிகத் தெளிவாக இருந்தது – “இந்தியா பலமுகம் கொண்ட நாடு. தனி மனிதர் ஒருவரால் இந்தியாவை மாற்றிவிட முடியாது. பஞ்சாபி பேசும் ஒரு பிரதமரை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடியாது. சீனாவில் 90% ஒரே மொழி பேசுவோர் இருப்பதனால் அது சாத்தியப்படலாம். இந்தியா தன வரையறைகளை மீறவே முடியாது. இது வெள்ளையரின் கடுமானத்தில் உருவான நாடு; இந்த சவால்களுடன் தான் நாம் இதை அணுக வேண்டும்” என்றவர் மேலும் கேள்விக்கான பதிலில், “நாங்கள் சிங்கப்பூரை அனைவரும் சமாகப் போட்டியிடும் ஒரு களமாகத் தொடங்கினோம், ஆங்கிலத்தை பொது மொழியைத் தேர்ந்தெடுத்தது…யாருக்கும் அது சாதமாக இல்லை.”

இவ்வாறு ஒரு நாடு(country) உருவாகும் பொழுது, பலதரப்பினரும் சேர்ந்து வாழும் சூழல் நேருமாயின்; யாருக்கும்  சாதகமற்ற ஒரு சமமான இயங்கு தளத்தை அமைத்தல் அவசியம். இந்தியாவை நிர்மாணித்த நேருவின் கீழான ஆட்சி இதையே செய்தது.லீக் வான் யூவே ஏற்க மறுக்கும்  – அனைவருக்கும் ஓட்டுரிமை, என்பதை எடுத்த எடுப்பில் இந்தியா நிறைவேற்றியது என்பதே அதற்கு சாட்சி. இந்தியா ஒரு கூட்டமைப்பாகவே இருக்க, இந்த அரசியில் அமைப்பு பல வசதிகளைச் செய்துள்ளது. அவ்வசதிகளாலேயே நாம் இன்று பல தளங்களில் உரக்க கேள்விகளைக் கேட்க முடிகிறது.இவையின்றி, சாதி மத இனப் பூசல்கள் உள்ள இந்த நாட்டில் வாய்திறக்க quota வைத்திருப்பார் சிலர்.

ஹிந்தியைத் தூக்கிப் பிடிக்கும் பலர் ஐரோப்பிய நாடுகள் செல்லும் போது ஆங்கிலம் கூட மறந்து அந்நாடுகளின் மொழிகளை குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். பல சமயங்களில் வேலை நிமித்தமாய் அம்மொழிகளைக் கற்றுக்கொள்ளக் கூடத் தயங்குவதில்லை. ஆனால் சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் இதே வகையைச் சேர்ந்த பலர் ஆட்டோ ஓட்டுனருக்குக் கூட ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது – ஒரு மொழியின் அதிகாரத்தையே காட்டுகிறது(கொழுப்பையும் கூடத் தான்).

ஒரு மொழி வளர முக்கியக் காரணிகள் அதன் பொருளாதாரம் மற்றும் அதிகாரம். ஜெர்மன், ஜாப்பனீஸ், இத்தாலியன், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல உதாரணங்களில் அம்மொழிகளைப் பேசும் கூட்டம் பொருளாதாரத்திலோ அதிகாரத்திலோ தொடர்ந்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டுள்ளது. ஹிந்திக்கும் இது பொருந்தும். ஹிந்தி பேசும் இந்த ஆறு மாநிலத்தவர் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை நிரப்புகின்றனர். அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. ஆனால் ஹிந்தியை திணிப்பதில் அவர்கள் தோற்பது இதே இடங்களை நிரப்புப்பும் பரபரப்பில் தான். மற்ற மொழி பேசும் மாநிலங்களும் இதற்கு ஈடான இடங்களை பெற்றுள்ளன.ஐரோப்பிய நாடுகளில், அம்மொழிகள் அந்நாட்டவரின் ‘தேசிய’ மொழிகள் என்று வாதிட்டு, ‘அதனால் அதை ஏற்கிறோம்’ என்றால் ; இந்தியா தேசமா(nation) இல்லை நாடா(country) என்பது தெரிந்திருக்க வேண்டும். இந்தியா ஒரு நாடு (country), தேசம் (nation) அல்ல. தமிழ்நாடு ஒரு தேசம், கேரளம் ஒரு தேசம், ஆந்திரம் ஒரு தேசம், மாராட்டா ஒரு தேசம். இவைகள் அடங்கிய ஒரு கூட்டமைப்பு(union) தான் இந்தியா. இவற்றை அங்கீகரித்தே 22 ஆடசி மொழிகள் இங்கு உள்ளன. பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியும் என்றால், அவைக் குறிப்பில் பேசியது இடம்பெறும் என்றால்; சென்னை சென்ட்ரலிலும் தமிழில் பேச முழு உரிமை உள்ளது.

மேலும் ஒரு முக்கியமான காரணி – பொருளாதாரம். இந்த ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா,கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன.இவை தொழில் வளம் பெற்று முன்னுக்கு வரும் பட்சத்தில், ஹிந்தி திணிப்பு மேலும் மூர்க்கமாக இருக்கும்.

விவாதம் 2ஆம் பகுதியில் தொடரும்..

Leave a comment